Skip to main content

'வைகாசி விசாகம்' - முருகப்பெருமான் பிறந்த நாளில் அவரது பூர்வ ஜென்மம் தெரிந்து கொள்வோமா ?

ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...

வைகாசி விசாகம் ...
எல்லாம் வல்ல ஈசனிடமிருந்து அக்னி ஸ்வரூபமாக, முருகப்பெருமான் அவதரித்த மகிமை வாய்ந்த திருநாள் "வைகாசி  மாத விசாகம் நட்சத்திர நன்னாள்".  முருகப்பெருமானை தமிழ்ப் புலமைக்கும், ஞானத்திற்கும்  வடிவாக நாம் சொல்வதுண்டு. அப்பேற்பட்ட அவதார தினத்திலே, அவரது பூர்வ ஜென்மம் பற்றி நாம் அறிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு... 

ஆம், முருகப்பெருமான் அவரது பூர்வ ஜென்மாவில் யாராக இருந்தார், அதற்கான புராண ஆதாரங்கள் என்ன என்று, இந்த 'சிறியவன்' விடை தேடும் பொழுது, வழக்கம் போல எந்த கேள்விக்கும் விடை காண முற்படும்பொழுது முதலில் தேடும் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா அவர்களது உரையில் இருந்தே ஒரு சில பகுதிகள் இன்று பார்க்கலாம்... 

மஹா பெரியவா அவர்களின் மிக அற்புதமான, அவருக்கே உரித்தான பாணியில் விளக்கம்... இதோ, நமது ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்காக ...

மஹா பெரியவா உரை :
சரியாகச் சொன்னால், இது சுப்ரம்மண்ய அவதாரம் இல்லை. சுப்ரம்மண்யராக வருவதற்கு முன்னால் அவர் யாராக இருந்தார் என்று இந்தக் கதை சொல்கிறது. இது எப்படி எனக்குத் தெரிய வந்தது என்பதே ஒரு கதை மாதிரித்தான்.

வியாஸர் ‘பிரம்ம ஸூத்திரம்’ என்று பரமாத்மா தத்வத்தைப் பற்றி விசாரணை செய்து எழுதியிருக்கிறார். அதில் மூன்றாவது அத்தியாயம், மூன்றாவது பாதத்தில், முப்பத்திரண்டாவது சூத்திரம். “ஒர் அதிகாரத்துடன் அவதரித்தவர்களுக்கு அதிகாரம் உள்ள வரையில் சரீரத்தில் இருப்பு உண்டு” என்று சொல்கிறது. இதற்கு பாஷ்யம் பண்ணும்போது நம் ஆசார்யாள், “பிரம்மாவின் மானஸ புத்திரரான ஸனத்குமாரர்கூட, தானே ருத்திரனுக்கு வரம் கொடுத்துவிட்டு அதற்காக, ஸ்கந்தனாகப் பிறப்பெடுத்தார்” என்று திருஷ்டாந்தமாகச் சொல்லியிருக்கிறார்.

ஸனத்குமாரராவது, பரமேசுவரனுக்கு வரம் தருவதாவது, அதற்காக மறுபடி பிறப்பதாவது, அதுவும் சாக்ஷாத் ஸ்கந்தனாக – இது எந்தப் புராணத்திலிருக்கிறது என்று எனக்குத் தெரியாமல் இருந்தது. பல பண்டிதர்களை விசாரித்துப் பார்த்தும் தெரியவில்லை. ஆஞ்சநேய ஸ்வாமிகளும் ரொம்ப விசாரித்துவிட்டு, பதினெட்டுப் புராணங்களையும் பார்த்துப் தமிழில் சுருக்கிப் போட்டிருக்கிற (ஸ்ரீ வத்ஸ) ஸோமதேவ சர்மாவிடம் இந்தக் காரியத்தைக் கொடுத்தார். சர்மா எனக்கு பிக்ஷை பண்ண வந்தபோது, பெரிய பிக்ஷையாக இந்த ‘டிஸ்கவரி’யைச் சொன்னார். ‘திரிபுரா ரஹஸ்யம்’ என்ற கிரந்தத்தில் மஹாத்மிய காண்டம் முப்பத்தேழாம் அத்தியாயத்தில் இது நீள நெடுகப் பெரிய கதையாகச் சொல்லியிருக்கிறது.

கதைக்கு வருகிறேன்:

பிரம்மாவின் மனஸிலிருந்து உதித்தவர் ஸனத்குமாரர். அவர் பிரம்ம ஞானி. சுகாசாரியார் மாதிரி, உள்ளும் புறமும் எல்லாம் ஒன்று என்று ஸதாகாலமும் உணர்ந்திருந்தவர்.

இப்படிப்பட்டவருக்கு விசித்திரமாக ஒரு நாள் ஸ்வபப்னம் வந்தது. ஸ்வப்பனத்தில் தேவர்களும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் ஸனத்குமாரர் தேவ சேனாபதியாக யுத்தம் செய்து, அசுரர்களை எல்லாம் சம்ஹரிக்கிறார்.

விழித்தெழுந்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தகப்பனாரான பிரம்மாவிடம் போய் ஸ்வப்பனத்தைச் சொல்லி, அதற்கென்ன அர்த்தம் என்று கேட்டார்.

“குழந்தை! நீ பூர்வ ஜன்மத்தில் வேத அத்யயனம் செய்தாய். அதில் தேவாசுர யுத்தம் என்று வருவது உன் மனஸில் ஆழப் பதிந்துவிட்டது. வேத யக்ஞங்களால் ஆராதிக்கப்பட்டு அநுக்கிரகம் செய்கிறவர்கள் தேவர்கள். இவற்றை அழிக்க நினைக்கிறவர்கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் இருந்து ஆழ்ந்த பிடிமானத்தால், “அசுரர்களையெல்லாம் நாமே சம்ஹாரம் செய்துவிட மாட்டோமா?’ என்று பூர்வஜன்மத்தில் ஆத்திரப்பட்டாய். அந்த நினைப்புத்தான் இந்த ஜன்மாவிலும் தொடர்ந்து வந்து ஸ்வப்னமாக வெளியாகி இருக்கிறது” என்றார் பிரம்மா.

ஸனத்குமாரரிடம் பிரம்மா, “உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது வாஸ்தவத்திலேயே நடந்துவிடும். அதனால் நீ யதார்த்தமாகவே ஒருநாள் தேவ சேனாதிபதியாக அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிறாய். இந்த ஜன்மாவில் நீ, ‘தேவராவது, அசுரராவது, எல்லாம் ஒரே பிரம்மம்’ என்று இருப்பதால், இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப் போகிறாய்” என்றார்.

வாக்கு, மனம், சரீரம் மூன்றும் ஒருத்தருக்கு சத்தியத்திலேயே பிரதிஷ்டையாகிவிட்டால், அப்படிப்பட்டவர் உத்தேசிக்காமலே அவருக்கு ஒரு பெரிய சக்தி வந்துவிடும். அதாவது, அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியத்தைத்தான் சொல்ல வேண்டும் என்றில்லாமல், அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியமாகிவிடும். தவறுதலாகவோ, தெரியாததாலோ அவர் உண்மைக்கு விரோதமாக ஒன்றைச் சொன்னால்கூடத் வாஸ்தவத்தில் அப்படியே நடந்துவிடும்.

பரம சத்தியத்திலேயே ஸ்திரமாக நின்ற ஸனத்குமாரர் எதை நினைத்தாலும் – ஸ்வப்னத்தில் நினைத்தால்கூட – அதுவே சத்தியமாகிவிடும்.

இந்த சமாச்சாரம் தெரிந்து கொண்ட பின் ஸனத்குமாரர் ஆத்மாராமராக, பரப்பிரம்மத்தைத் தன்னில் தானாக அநுபவித்துக்கொண்டு, பழையபடியே உட்கார்ந்து விட்டார். லோகமெல்லாமே அவருக்கு ஸ்வப்னமாகி விட்டதால் தம் ஸ்வப்பனத்தைப் பற்றி நினைக்கவேயில்லை.

ஆனால் இவர் ஸ்வப்பனத்தில் நினைத்த நினைப்பு அசத்தியமாக போய்விடக்கூடாதே என்று பரமேசுவரனுகக்கு விசாரம் வந்துவிட்டது. அதனால், இவர் தரிசனத்துக்காகத் தபஸ் பண்ணாதபோதே, அவராகப் பார்வதீ ஸமேதராக இவருடைய ஆசிரமத்துக்கு வந்து விட்டார்.

ஸனத்குமாரருக்கோ மரம், மட்டையிலிருந்து சகலமும் ஒரே பிரம்மமாகத்தான் தெரிந்தது. பிரம்மத்தில் உசந்த பிரம்மம், தாழ்ந்த பிரம்மம் என்று உண்டா என்ன? எல்லாம் பிரம்மம் என்ற மாதிரியே பரமேசுவரனும் பிரம்மமாகத் தெரிந்தார். அவரை உபசரிக்க வேண்டும், பூஜை பண்ண வேண்டும் என்ற எண்ணமே ஸனத்குமாரருக்குக் கொஞ்சம் கூட உண்டாகவில்லை. அவர் தம்பாட்டுக்கு உட்கார்ந்தது உட்கார்ந்தபடி இருந்தார்.

பார்வதீ – பரமேசுவராள் ரொம் நேரம் நின்று பார்த்தார்கள். ஒரு பலனும் இல்லை. இப்படி மகா ஞானியாக ஒரு பிள்ளை இருப்பதைப் பார்த்து அவர்களுக்குப் பரமப் பிரீதிதான். இருந்தாலும் ஈசுவரன் பொய்க் கோபத்துடன் ‘ஞானி என்ற அகங்காரம்தானே உனக்கு? நாங்கள் லோகத்தின் மாதா பிதாக்கள் வந்திருக்கும்போது அவமதித்துவிட்டாயே. நான் சாபம் கொடுத்தால் என்ன செய்வாய்?’ என்று கேட்டார்

ஸனத்குமாரர் பயந்துவிடவில்லை. அலட்சியமாக, “நீர் சாக்ஷாத் மகா கோபிஷ்டரான ருத்திரராக இருந்து சாபம்தான் கொடும். அது ஆத்மாவைப் பாதிக்காது” என்று சொல்லிவிட்டு நிச்சிந்தையாக இருந்தார்.

‘அடடா, எப்பேர்ப்பட்ட உண்மையான ஆத்ம ஞானி!’ என்று ஈசுவரனுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது.

இன்னும் கொஞ்சம் பரீட்சை பார்த்து, பூராவும் ஞானி தானா என்று தெரிந்துகொள்வோம் என்று நினைத்து, “அப்பா; உன்னுடைய ஞானத்தை நான் ரொம்பவும் மெச்சுகிறேன். என்ன வேண்டுமானாலும் வரம் கேள், தருகிறேன்” என்றார்.

ஸனத்குமாரர் சிரித்தார். ‘உம் வரத்தை நீரே வைத்துக் கொள்ளும். எதை அடைந்தபின் இன்னொன்று வேண்டும் என்ற ஆசை லவலேசமும் இருப்பதில்லையோ, அப்படிப்பட்ட நிறைந்த நிறைவாக இருக்கிற எனக்கு வரத்தினால் ஆக வேண்டியது கடுகத்தனைக்கூட இல்லை’ என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

அதற்கும் ஒரு படி மேலே போனார். “பரமேசுவரா! நீ பேசுவதிலிருந்து பார்த்தால் நீதான் வரம், சாபம் இதுகளிலெல்லாம் ஏதோ அர்த்தம் இருக்கிறதென்று நினைப்பதாகத் தெரிகிறது. அப்படியானால் சரி, உனக்கு ஏதாவது வரம் வேண்டுமானால் கேள், தருகிறேன்” என்றார்.

ஸனத்குமாரர் சொன்னதைக் கேட்டு ஈசுவரனுக்குப் பெருமையாக இருந்தது. நம் குழந்தை நம்மிடம் ‘தாட்பூட்’ செய்தால், நமக்கு சந்தோஷமாகத்தானே இருக்கும்? சர்வ லோக மகேசுவரனான அவர் ரொம்பவும் தழைத்து தம்மைச் சிறியவராக்கிக் கொண்டு ஸனத்குமாரரிடம் வரம் கேட்டார். இவருடைய ஸ்வப்பனத்தை நிஜமாக்க இதுவே வழி என்று நினைத்துக் கேட்டார்.

“அப்பா! இப்பேர்ப்பட்ட மகா ஞானியான நீ பிரம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறாய். பிரம்மா செய்த பாக்கியம் எனக்கும் கிடைக்கும்படியாக வரம் கொடுப்பாய்! இன்னொரு ஜன்மாவில் நீ எனக்குப் புத்திரனாகப் பிறக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

“ஆஹா, உனக்குப் பிள்ளையாகப் பிறக்கிறேன்” என்று ஒப்புக் கொண்டார் ஸனத்குமாரர்.

ஞானம் வருகிறவரையில்தான் இனிப் பிறவி வேண்டாம் என்று அழுவோம். ஞானம் வந்துவிட்டால் எப்போதும் ஆனந்த ஸாகரம்தான். ஜன்மா கின்மா எல்லாம் அதில் ஒரு சின்னக் குமிழி மாதிரிதான். அது வேண்டும் வேண்டாம் என்பதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியாது.

ஸனத்ககுமாரர் சொல்வதெல்லாம் சத்தியமாகிவிடும் அல்லவா? இப்போது ஈசுவரனை மட்டும் பார்த்ததுதான் ‘உனக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்றார். அம்பாளையும் சேர்த்து, ‘உங்களுக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்று சொல்லவில்லை.

இதையும் ஸனத்குமாரர் யோசித்துப் பார்த்தார்.

ஸனத்குமாரருக்கும் தாம் பார்வதியை நீக்கி பரமேசுவரனுக்கு மட்டும் பிள்ளையாகப் பிறப்பதாகச் சொன்னதிலும் ஒரு நியாயம் தெரிந்தது. அவருக்கு எவரிடமும் நிர்ப்பயம் தான். அதனால் அந்த நியாயத்தை வெளிப்படையாகவே சொன்னார்.

‘கேட்காதவருக்கு ஒன்றைத் தரக்கூடாது என்று சாஸ்திரம். அந்த நியாயப்படி நீதான் என்னிடம் வரம் கேட்டாயே தவிர, பார்வதி கேட்கவில்லை. ஆகவே, உனக்கு மட்டுமே பிள்ளையாகப் பிறப்பேன். நீ மட்டுமாக என்னை எப்படி உற்பவிக்கச் செய்வாயோ, அப்படிச் செய்துகொள்” என்று ஸ்வாமியிடம் சொன்னார்.

இதைக் கேட்டதும் அம்பாளுக்கு ரொம்ப ஏமாற்றமாக, பரம துக்கமாக ஆகிவிட்டது. லோகத்திலுள்ள சமஸ்த ஜீவராசிகளும் அவள் குழந்தைகள்தாம் என்றாலும், இது அந்த ஞானாம்பாளுக்கே தெரியும் என்றாலும், இப்படிப்பட்ட ஒரு பிரம்மஞானி மறுபடியும் பிறக்கிறபோது, அவன் நேராகத் தனக்குப் பிள்ளையாகப் பிறக்கவேண்டும் என்று அவளுக்கும் ஆசையிருந்தது.

இவர் சாஸ்திரத்திலிருந்து நியாயம் காட்டினமாதிரி, அவளும் காட்டித் தர்க்கம் பண்ணினாள். “சாஸ்திரங்களில் பதியையும் பத்தினியையும் ஒன்றாகத்தான் சொல்லியிருக்கிறது. பதி பிரார்த்திப்பதெல்லாம் பத்தினியையும் உத்தேசித்துத்தான். ஆனதால் நான் தனியாக வரம் கேட்க வேண்டும் என்றில்லை. அவர் கேட்டதாலேயே நீ எனக்கும் புத்திரனாக வரத்தான் வேண்டும்” என்று ரைட் கேட்டாள்.

ஸனத்குமாரர் யோசித்தார். “அம்மா, நீ சொல்வது நியாயம்தான். இருந்தாலும் நான் ஈசுவரனிடமிருந்து மட்டும் உற்பவிப்பது இன்னொரு தினுசில் எனக்குத் திருப்தி தருவதாகத் இருக்கிறது. எல்லாம் பிரம்மம் என்று எனக்குத் தெரிந்தாலும், அதற்கே நீங்கள் இரண்டு பேரும் எனக்கு இத்தனை ‘டைட்டில்’ கொடுத்தாலும், ஒரு விஷயத்தில் எனக்குப் பக்குவம் வரவில்லை. அதாவது, ஸ்திரீ புருஷ சம்பந்தத்தில் நாம் பிறப்பதாவது, கர்ப்பவாசம் செய்து கீழ்முகமாக ஜனிப்பதாவது என்று இன்னமும் எனக்கு அருவருப்பாகத்தான் இருக்கிறது. பிரம்ம ஞானிக்கு இப்படி இருக்கக் கூடாததுதான். ஆனால் ஏனோ இருக்கிறதே. அதனால் இதைச் சொல்கிறேன். ஆகையால் நீ பெரிய மனசு பண்ணி, உன் பதி மட்டுமே என்னைச் ஜனிக்கச் செய்வதற்கு அநுமதி தர வேண்டும்” என்றார்.

ஆனால் அம்பாளுக்கு மனசு வரவில்லை.

யோசித்துப் பார்த்துக் கடைசியில் ஒரு ‘காம்ப்ரமைஸு’க்கு வந்தார்கள்.

ஆதியில் பரமேசுவரன் பஸ்மாசுரனுக்கு வரம் தந்திருந்தார். இந்த வர பலத்தால், அவன் யார் தலையில் கைவைத்தாலும் அவர் பஸ்பமாகிவிடுவார். வரம் பலிக்கிறதா என்று பரமேசுவரனிடமே பரீட்சை பார்க்க வந்தான் அசுரன். உடனே அவர் அந்தர்த்தானமாகி விட்டார்.

அந்தச் சமயத்தில் அம்பாள் ஏதோ லீலா நிமித்தம் தன்னுடைய ஸர்வக்ஞத்வத்தை மறைத்துக்கொண்டு சாதாரண ஸ்திரீ மாதிரி இருந்தாள். எனவே, திடீரென்று பரமேசுவரனின் சரீரம் மறைந்ததைப் பார்த்ததும் அவளுக்குப் ‘பகீர்’ என்றது. பதிவிரதா ரத்தினமான அவளால் ஈசுவரனின் பிரிவைத் தாங்க முடியவில்லை. அப்போதே அப்படியே உருகிவிட்டாள். யதார்த்தத்திலேயே அவளுடைய சரீரம் உருகி ஒரு ஜலாசயமாக (நீர் நிலையாக) ஆகி விட்டது. அதுதான் சரவணப் பொய்கை.

பிறகு பஸ்மாசுரன் மறைந்து ஸ்வாமி சரீரத்துடன் வந்ததும், அம்பாளும் தன் திவ்விய தேகத்தை எடுத்துக் கொண்டாள். இருந்தாலும் அவளுடைய பதிவிரதா தர்மத்துக்கும் பிரேமைக்கும் அடையாளமாக சரவணப் பொய்கையையும் அழியாமலிருக்கும்படியாக அநுக்கிரகத்தாள். சரவணம் சாட்க்ஷாத் இவள் சரீரம்தான். அது இப்போது நினைவுக்கு வந்தது.

அதனால், ஸனத்குமாரர் அடுத்த ஜென்மாவில் பரமேசுவர தேஜஸாக ஜனித்து விடுவதென்றும், பிறகு அதை அம்பாள் 'சரவணம்' என்ற தன் சரீரத்தில் தாங்கி ஸுப்ரம்மண்ய ஸ்வரூபமாக்கித் தருவதென்றும் முடிவு செய்து கொண்டார்கள்.

இதன்படியே பிற்பாடு ஈசுவரன் தன் நெற்றிக் கண்களிலிருந்து பொறிகளை வெளியிட்டார். ஸனத்குமாரர்தான் இப்படி ஆவிர்பவித்தவர். அந்தத் தேஜசின் உக்கிரத்தை எவராலும் தாங்க முடியவில்லை. முதலில் கங்கை தாங்கப் பார்த்தாள். முடியவில்லை. அப்போது பிரம்மா அவளிடம், “இதைக் கொண்டுபோய் 'சரவணத்தில்' சேர்த்துவிடு” என்றார். “ஆனானப்பட்ட என்னாலேயே தாங்க முடியாத உக்ர ஜ்வாலையை அந்தச் சின்னப் பொய்கை எப்படித் தாங்கும்?” என்று கங்கை அவரைக் கேட்டாள். அவர், “சரவணம் என்பது சாக்ஷாத் பராசக்தியின் சரீரமாகும். அது ஒன்றாலேயே ஈசுவர தேஜஸை தாங்க முடியும்” என்றார்.

இதன்படியே கங்கை செய்ய, சரவணபவனாக முருகன் அவதரித்தான். பிறகு ஸனத்குமாரர் கண்ட ஸ்வப்னப்படி தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாகி, அசுரர்களை ஸமூலம் இருந்த இடம் தெரியாமல் சம்ஹாரம் செய்து சர்வ லோகங்களையும் ரக்ஷித்தான் இந்த சரவணபவன். அவருக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் இதுவே ஷடக்ஷரி, ஆறெழுத்து என்று மகாமந்திரமாக இருக்கிறது. சரவணமாக இருக்கும் அம்பாளின் மகிமை!

ஸனத்குமாரர்தான், ஸ்கந்தர் என்று சாந்தோக்ய உபநிஷத்திலும் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. அதில் அவரே ஞான பண்டிதர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனானப்பட்ட நாரத மகரிஷி ஸனத்குமாரரிடம்தான் ஞானோபதேசத்துக்காக வருகிறார். சகல வேதங்களையும், இதிஹாச புராணங்கள், சகல சாஸ்திரங்கள், தேவ வித்யை, பிரம்மவித்யை, பூத வித்யை, நக்ஷத்திர வித்யை என்று ஒன்று பாக்கியில்லாமல் எல்லா விஷயங்களையும் கரைத்துக் குடித்து விட்டேன். ஆனால், இதனாலெல்லாம் வெளி சமாச்சாரங்கள், மந்திரங்களைத்தான் தெரிந்து கொண்டேனேயொழியத்  தன்னைத்  தெரிந்து கொள்ளவேயில்லை. ஆத்மாவை அறியாததால் துக்கத்தில்தான் இருக்கிறேன். நீங்கள்தான் என்னைத் தூக்கி அக்கரை சேர்க்க வேண்டும்’ என்றார் நாரதர். 

ஸனத்குமாரர், “ஆத்மா எங்கேயோ இருக்கிறது என்று தேடிப்போக வேண்டியதில்லை. கீழும் மேலும், முன்னும் பின்னும், வலது பக்கமும் இடது பக்கமும் எல்லாம் ஒரே ஆத்மாதான். அதைப் பற்றியே ஒருத்தன் தியானித்து தியானித்து, அதுவாகவே ஆகிவிட்டால், அப்புறம் அதிலேயே அவன் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறான். உண்மையான ஸ்வராஜ்யம் தன்னைத்தானே ஆண்டு கொள்கிற இந்த நிலைதான். இவன்தான் ‘ஸ்வராட்’ – உண்மையான சக்கரவர்த்தி. 

இந்த உத்தம நிலையை அடைய முதலில் ஆகார சுத்தியில் ஆரம்பிக்க வேண்டும். பிறகு படிப்படியாக சித்தசுத்தி உண்டாகி, மனசு நன்றாக தியானத்தில் நிலைத்து நின்று, எல்லாக் கட்டுக்குள் தெரித்து விழுந்து, ஆத்ம ஸ்வரூபமாகவே இருப்பான்” என்று வழிகாட்டினார். ‘இப்படியாக பகவான் ஸனத்குமாரர், இருள் கடந்த நிலையைக் காட்டினார். ‘அவருக்குத்தான் ஸ்கந்தன் என்று பேர்; அவருக்குத்தான் ஸ்கந்தன் என்று பேர்’ என்று உபநிஷத்து இரண்டு தடவை முத்தாய்ப்பு வைக்கிறது.

இருள் கடந்த ஒளி, ஞானாக்னி முகன்தான். அதைத்தான் சாந்தோக்யம் சொல்கிறது.

சாந்தோக்ய அவஸ்தா (‘அவஸ்தா’ என்றால் நிலை) தான் ஜெண்டவஸ்தா (Zend Avesta, Part of Zoroastrianism) என்ற பார்ஸி மதக்கிரந்தத் தொகுப்பாயிருக்கிறது. பார்ஸி மதம், முழுக்க முழுக்க அக்னி வழிபாடுதான். ஸெளராஷ்டிர தேசக்காரர் ஒருத்தர் அதை ஸ்தாபித்தவர். ‘ஸெளராஷ்டிரர்’ என்பதே ‘ஜொரொதஸ்த்ரர்’ (Zorothustra) என்றாகியிருக்கிறது. ‘ஸெளரம்’ என்றால் சூரிய சம்பந்தமானது. சூரியன், அக்னி, காயத்ரி மூன்றும் சம்புவின் விசேஷ ரூபங்கள் என்று ஆச்சார்யாள் ( ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள்) ‘பிரசனோத்தர ரத்ன மாலிகை’யில் சொல்கிறார். திருவண்ணாமலையில் அக்னி ஸ்வரூபமாகவே ஈசுவரன் இருக்கிறார். சிவாக்னிதான் முருகன்.

மலையாளத்தில் தீபத்தில் அம்பாளை ஆராதித்து, ‘பகவதி சேவை’ என்கிறார்கள். ஜொலிக்கிற ஞானாக்னியான வேலாயுதத்தை ‘சக்தி , சக்தி’ என்றே சொல்கிறோம்.

வேதமே முக்கியமாக அக்னி வழிபாட்டு மதம்தான். ‘அக்னி’ என்ற வார்த்தையோடுதான் வேதம் ஆரம்பிக்கிறது. அக்னி காரியமே ‘ஔபாஸனம்’ என்பது. ‘உபாஸனைக்கு’ இடமாவது ‘ஔபாஸனம்’. உபாஸனை என்றாலே அக்னி காரியம் தான் என்றாகிவிட்டது. 'ஔபாஸனை' நான்கு வர்ணத்துவருக்குமே உண்டானது.

முக்கியமான உபாஸனையான அக்னி காரியத்துக்கு சுப்ரம்மண்யர் அதிதேவதையாக இருப்பதால்தான், அவரை விட்டுவிட்டுப் ‘பஞ்சாயதன பூஜை’ என்பதில் பிள்ளையார், சூரியன், மகாவிஷ்ணு, அம்பாள், ஈசுவரன் ஆகிய ஐவரை மாத்திரம் ஆராதிக்கச் சொல்வதாகத் தோன்றுகிறது. முருகன் நம் மதஸ்தரால் நிச்சயம் ஆராதிக்கப்பட வேண்டியவர் என்பது, பஞ்சாயதனத்தை மறுபடியும் உயிர்ப்பித்த அதே பகவத் பாதாள் ஸ்தாபித்த “ஷண்மத”ங்களில் முருக வழிபாடான “கௌமார”மும் ஒன்று என்பதிலிருந்து உறுதியாகிறது.

தற்காலத்தில் அக்னி காரியம் குறைந்து, மூர்த்தி பூஜை அதிகமாகியிருக்கிறது. சுப்ரம்மண்ய சம்பந்தமான புராணங்கள், ஸ்தோத்திரங்கள், திருப்புகழ் ஆகியன நிறையப் பிரச்சாரமாகி, பழனி, திருச்செந்தூர், திருத்தணி முதலான க்ஷேத்திரங்களின் உத்ஸவாதிகள், ஜனங்களை ரொம்பவும் வசீகரித்து வருகின்றன.  ஆகவே, பஞ்சாயதன பூஜையிலும் சுப்ரம்மண்யரைச் சேர்த்துக் கொண்டுவிடுவது உத்தமமாகும்.

ஆசார்யாள் “ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்” என்று ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். அதில் “மயூராதிரூடம்” என்று ஆரம்பிக்கிற ஸ்லோகத்தில் “மஹீ தேவ தேவம்” என்கிறார். “மஹீதேவர்” என்றால் 'பிராம்மணர்'. இவர்களால் பூஜை செய்யப்பட வேண்டியவர் 'சுப்ரம்மண்யர்' என்கிறார்.

“சுப்ரம்மண்யர் தமிழ்க் கடவுள்தான்; வேதத்தில் இல்லாதவர்” என்று சிலர் சொல்வதைக் கேட்டு, வைதிகமானவர்கள் அவரை உபாஸிக்காமல் இருந்துவிடக்கூடாது என்றே இதைச் சொல்கிறேன்.

இதே புஜங்கத்தில், திருச்செந்தூரில் கடலோரத்தில் விளங்கும் ஷண்முகநாதரைப் பார்த்து, “பராசக்தி புத்திரனே! சமுத்திரக் கரையில் நிற்கிற நான் சம்சார சமுத்திரத்தின் அக்கரைக்குப் பக்தர்களைக் கடந்துவிடுகிறேன்.  அலைகளெல்லாம் சமுத்திரத்தில் மடங்கி விழுந்து, ஒடுங்கிவிடுவதைப்போல், என் சந்நிதிக்கு வருகிறவர்களின் ஆபத்துக்கள், கஷ்டங்கள் எல்லாம் ஒடுங்கியே போகும் என்பதைக் காட்டுகிறாய்” என்று மனசு உருகும்படி பாடியிருக்கிறார். “குகனைத் தவிர இன்னொரு தெய்வம் எனக்குத் தெரியவில்லை. தெரியவே இல்லை” (ந ஜானே ந ஜானே) என்கிறார்.

‘கடலிலே அலைகள் எழும்பி, அதிலேயே லயிக்கிற மாதிரி, சகல ஜீவ ஜகத்தும் பரம சத்தியமாக என்னிடம்தான் தோன்றி, என்னிடமே முடிகின்றன’ என்ற ஞானோபதேசத்தைத் திருச்செந்தூர் முருகன் சொல்லாமல் சொல்கிறார். நாரதருக்கு ஞானோபதேசம் செய்த ஸனத்குமாரரிடம் ஈசுவரனே தழைந்து வரம் கேட்டு, ஞான ஸ்கந்தனாக அவரைப் பெற்று, மறுபடியும் அவரிடம் தழைந்து ஞானோபதேசம் (பிரணவ உபதேசம்) வாங்கிக் கொண்டார்.

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
என்ன அன்பர்களே, இன்று முருகப்பெருமானை பற்றி ஒரு அரிய தகவல் தெரிந்து கொண்டோமா ? அடுத்த பதிவில் மற்றுமொரு இனிய தகவலுடன் ச(சி)ந்திப்போம்... 

இன்று "கந்த சஷ்டி கவசம்" ஒலிக்க செய்வோம்...இங்கு கிளிக் செய்யவும்.

இன்று "கந்தர் கலி வெண்பா" ஒலிக்க செய்வோம்...இங்கு கிளிக் செய்யவும். 

உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...

நன்றி ...


ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா, 
திருநெல்வேலி...

Comments

Popular Posts (அதிகம் வாசிக்கப்பட்டவை)

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி - பாடல் வரிகள் - தமிழில்

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி  பகுதி  - 1 பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் உறவினர்களே வாருங்கள் - லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம் தினமும் தீப ஆரத்தி எடுப்போம் - தினமும் தீப ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் - பகலாரத்தி எடுப்போம் தினமும் ஆரத்தி எடுப்போம் - நாங்கள் தினமும் ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பகுதி  - 2 ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம் தரிசனம் தந்து அருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே ஆரத்தி ஸாயி பாபா கால்களின் தூசியே வழிகாட்டி கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா - காமனை எரித்ததும் நீரே கருணை காட்டி எமக்கருள்வீரே - எமக்கருள்வீரே ஆரத்தி ஸாயி பாபா கருணையின் உருவே ஸாயி பாபா எங்கள் செயல்களுக்கு ஏற்ப அநுபவங்களைத் தந்து ஆத

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே... அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது. செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்... அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. கல்லடைப்பு நீங்க... ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்க

Miracles in Tirupati / திருப்பதி அதிசயங்கள்...

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்: பூலோகத்தில் திருப்பதி ஒரு அதிசய ஷேத்ரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... அந்த அதிசய ஷேத்ரம் பற்றி அரிய சில தகவல்கள் .... திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன.........அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.  உலகத்திலேயே இது போன்ற பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான்  திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. 3. எந்தக் கருங்கல் சிலையானாலும்

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   பாடல்   இது ... இந்தப்பாடல் 'அருணகிரிநாதர்' எனும் திரைப்படம் மூலமாகவும், பாடலின் தாள நடை காரணமாகவும் மிகவும் பிரபலமாகிய பாடல். ஆனால், அதையெல்லாம் விட அப்பாடலின் பொருளும்  மிக அருமையானது.  நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...இந்த இனிய நாளில்  அதனை தெரிந்து கொள்வோம்...  இதோ, அருமையான 'திருப்புகழ்' பாடல், அதனை தொடர்ந்து அதற்கான பொருள் விளக்கமும்...  முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப்

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - Shiva Thandava Stotram

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - பாடல் வரிகளுடன்: இராவணன் ஒரு மிகசிறந்த சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  வேதங்கள், இசை மற்றும் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய வித்தகன்.  ஒருமுறை,  சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலையை பெயர்த்தெடுத்து சிவபெருமான், பார்வதி தேவியோடு இலங்கைக்கு கொண்டு வந்து விட்டால் தனக்கு அழிவே  நேராது என்ற ஒரு எண்ணத்தோடு கயிலாய மலையை தனது பராக்கிரமத்தின் மூலம் பெயர்த்து எடுத்து விடலாம் என்றெண்ணி தனது இரு கைகளையும் மலையின் அடிப்பகுதியில் வைத்து அதனை தூக்க முயற்சிக்கும் பொழுது சினம் கொண்ட சிவபெருமான் தனது கால் விரலை கொண்டு அழுத்தி இராவணனை கயிலாய மலையின் அடியில் இருந்து மீள முடியாத படி செய்து விட்டார்.  பல நாட்கள் தனது தவறை மன்னிக்க வேண்டி மன்றாடிய இராவணனை, சிவபெருமான் தனது தியானத்தில் இருந்து திரும்பியே பார்க்காத நிலையில், ஒரு திரயோதசி திதியில் பிரதோஷ வேளையில் (மாலை 04:30 முதல் 06:00 மணி வரை) சிவபெருமானை வேண்டி மனமுருகி, மிக அருமையாக சந்த, தாள நடையுடன் கூடிய துதி ஒன்றினை இராவணன் இயற்றி பாடிட, அதில் மனம் குளிர்ந்த சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடி இராவணன

Problems and Solution Temples (பரிகார ஸ்தலங்கள் )

Problems and Solution Temples  (பரிகார ஸ்தலங்கள் ) Marriage Thirumanancheri near Kuttalam On the Mayiladuthurai-Kumbakonam road Travelbase: Kumbakonam Kodumudi Travelbase: Erode Madurai Meenakshi Kanchipuram Ekambareswarar Kanchipuram Kacchabeswarar Thiruverkadu Vedapureeswarar Travelbase: Chennai Thirumazhisai Othandeeswarar Travelbase: Chennai Thiruvidanthai Nithya Kalyana Perumal in East Coast Road Travelbase: Chennai Mylapore Travelbase: Chennai Vedaranyam Travelbase: Thiruveezhimizhalai Travelbase: Thirukkazhipalai 3 kms from Annamalai university, Chidambaram Travelbase: Chidambaram Uppiliyappan koil Travelbase: Kumbakonam Nachiyar Koil Travelbase: Kumbakonam Nachiyar Koil in Trichy Immayil nanmai tharuvar temple at Madurai Piranmalai near Thirupathur Travelbase: Karaikudi Thirukolakudi in Pudukkottai-Kilachevalpatti road Travelbase: Pudukkottai Thiru velvikudi near Kutralam Travelbase: Mayiladuthrai Kuttalam Travelbase: Mayilad

How to Improve Memory Power ? 7 Ways....

Memory Power Improvement Techniques: One: Daily consumption of Tulsi leaves brings about a remarkable development in memory power, eliminates intestinal worms, increases the digestive fire, alleviates cold, fever and malaria and prevents diseases like cancer. Therefore, except on Sundays, eat 5-7 Tulsi leaves daily in the morning and drink water after that. Tulsi leaves should not be plucked on Purnima, Amavasya, the twelfth lunar day and Sundays. Two: Grind 2 pieces of walnut (Akhrot), candy sugar (Mishri) and milk and drink it after chanting the following Mantra. This empowers the brain. “Aum Sri Saraswatye Namaha” Three: Put 5 Mamri Badam (almonds) into water in night. In the morning peel those almonds and mix it in mixture of 250 ml water and 250 ml milk. Also add Mishri (candy sugar) and 11 Kali Mirch (black pepper).  Boil this mixture till 250 ml is left out. Drink this after chanting “Aum Sri Sarswatye Namaha”. This helps to improve memory power and phys

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வேதேவாதி தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை  ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே (பூலோகத்தில்) சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன.  "ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்க, குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் தொடர்ந்து காரணமின்றி வரும் சண்டை, சச்சரவுகள் நீங்க, பணம் மற்றும் போதிய சொத்துக்கள் கை நிறைய இருந்தும் தொடர்ந்து தாமதமாகும் திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறின்மை ஆகிய  பிரச்சனைகள் தீர,  சம்பாதிக்கும் அனைத்து பணமும் குடும்ப மருத்துவ செலவுகளுக்காக விரயமாவது என்ற நிலை மாற" இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கும் மூல க்  காரணமாக உள்ள  "பித்ரு கடன்களை"  தீர்ப்பதற்கு / குறைப்பதற்கு  ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த "மஹாளய பட்சம்" ஆகும்... ஆகவே, அந்த மஹாளய பட்ச காலத்தில் (15 நாட்கள்)   அவசியம்  பித்ரு தேவதைகளுக்காக  தர்

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஜேஷ்ட மாதம்',  ( May / June )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி"  (Paandava Nirjala  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்:  ரிஷிகளில் முதன்மையான ஸ்ரீ வியாஸதேவரிடம்  பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக... ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன் , தனது பாட்டனாரும், மிகச்சிறந்த ரிஷி முனிகளில் முதன்மையானவருமான ஸ்ரீ வியாச தேவரிடம் தனது சந்தேக

ஏழ்மையை விரட்டி செல்வ வளம் அளிக்கும் "பரம ஏகாதசி" விரத மகிமை.

32 மாதங்களுக்கு ஒருமுறை வரும்  ' பரம ஏகாதசி ' விரதம்  ...  ஏழ்மையை விரட்டும் பரம ஏகாதசி விரத மகிமை ...  நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல் , உபவாஸங்களில் ( விரதங்களில் )  ' ஏகாதசி விரதம் ' என்பது மிக , மிக முக்கியமானதும்   மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட ....  தற்போது   வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி ' ஆகும் . வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும் , 32 மாதங்களுக்கு ஒரு முறை   புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த ' அதிக ' (Adhika)  மாதத்தில் தேய் பிறையில் வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி '  என்று அழைக்கப்படுகின்றது .    இந்த வருடம்   ' அதிக ' மாதம் வந்துள்ளது .  ' அதிக ' (Adhika)  மாதம் , (September/October )   தேய்   பிறையில் ( கிருஷ்ண   பட்சம் )  வரக்கூடிய ஏகாதசியே " பரம   ஏகாதசி "  (Parama Ekadasi)   என்று   அழைக்கப்   படுகின்றது .  பரம   ஏகாதசி   பற்றி ' ஸ்காந்த